Friday, November 25, 2011

Stoning of Soraya M

Stoning of Soraya M என்ற ஒரு அற்புதமான பெர்சிய மொழி திரைப் படத்தை பார்த்தேன்.  2008 இல் வெளியான இந்த திரைப் படம் ஈரான் நாட்டு கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மிக அற்புதமாக பதிவு செய்து இருக்கிறது.  நீண்ட நாள் கழித்து கண்கள் கலங்க நான் பார்த்த ஒரு படம் இது.


குஹ்ப்பாயே  என்ற ஈரான் நாட்டு கிராமத்தில், கணவன் அலி, மனைவி சொராயா, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் கொண்ட ஒரு குடும்பம்.  அழகான, அமைதியான, அன்பான பெண் சொராயா. அலிக்கு, மனைவி சொராயாவை கண்டாலே பிடிப்பதில்லை.   அவளை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு ஊரில் இருக்கும் ஒரு 14 வயது பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள திட்டமிடுகிறான்.  விவாகரத்துக்கு சம்மதித்தால் கணவனிடம் இருந்து பொருளாதார உதவி கிடைக்காது, அதனால் தன் குழந்தைகளை காப்பாற்ற முடியாது என்பதால் சொராயா விவாகரத்திற்கு மறுக்கிறாள்.  


இதனால் ஆத்திரமடையும் அலி எப்படியாவது சொராயாவை ஒழித்துக்கட்டிவிட்டால், தன் மறுமணத்திற்கு தடை இருக்காது என்று திட்டமிடுகிறான்.  அந்த ஊர் முல்லாவை (நம்ம கிராமத்து பஞ்சாயத்து தலைவர் மாதிரி), கைக்குள் போட்டுக் கொண்டு, தன் மனைவி சொராயா இன்னொருவருடன் கள்ள தொடர்பு வைத்து இருக்கிறாள் என்று பொய்யாக புகார் செய்து ஊரை நம்ப வைக்கிறான்.  அந்த ஊர் சட்டப்படி, கள்ள தொடர்பு குற்றத்திற்கு, ஊர் நடுவில், பெண்ணின் கைகளை பின்புறம் கட்டி. இடுப்புக்கு மேற்புறம் மட்டும் தெரியும் வகையில், 3 அடி குழியில் புதைத்து, ஊரில் உள்ள எல்லோரும், அந்த பெண்ணை கல்லால் அடித்து கொல்வது தான் தண்டனை.  ஆனால் கள்ள தொடர்பில் ஈடுபட்ட ஆணுக்கு எந்த தண்டனையும் இல்லை.  இன்னொரு கொடுமை, கணவன் உட்பட வெறும் இரண்டு சாட்சிகளுடன் குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும், தான் குற்றமற்றவள் என்று பெண் தான் நிரூபிக்க வேண்டும். அதே சமயம் தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருக்கிறான் என்று ஒரு பெண் குற்றம் சாட்டினாலும் அதையும் அந்த பெண் தான் நிரூபிக்க வேண்டும். 


சொராயாவிற்கு ஒரே ஆதரவு அவளுடைய அத்தை மட்டுமே.  குற்றச்சாட்டு பொய் என தெரிந்தும் பெண்களுக்கு சற்றும் சாதகமில்லாத அந்த ஊரின் பழமைவாத, ஆணாதிக்க, சட்ட திட்டங்களை எதிர்க்கவும் முடியாமல், சமாளிக்கவும் முடியாமல், நிரபராதி என்று நிரூபிக்க வாய்ப்பும் இல்லாமல் அந்த பெண்கள் படும் பாடு நம்மை ரொம்பவே பாதிக்கிறது. சொராயாவிற்கு ஊர் நடுவில் வைத்து கல்லால் அடித்து மரண தண்டனை என்று தீர்ப்பாகிறது.


தீர்ப்பு அறிவித்த சில மணி நேரத்திலேயே தண்டனை.  இன்னும் சிறிது நேரத்தில் தண்டனை நிறைவேறப்போகிறது.  வீட்டுக் காவலில் இருக்கும் அந்த இரண்டு பெண்களின் பயமும், கலக்கமும் நம்மையும் தொற்றிக்கொண்டு நம்மை என்னவோ செய்கிறது. அத்தை, சொராயாவை பார்த்து கலக்கத்துடன் "பயமாய் இருக்கிறதா?" என்று கேட்கிறாள். அதற்க்கு சொராயா, "சாவை கண்டு நான் பயப்படவில்லை, ஆனால் சாகப் போகும் கணங்களை நினைத்தால் தான் பயமாய் இருக்கிறது.  கற்கள், அடி, வலி....." என்கிறாள்.  எப்படிப்பட்டவர்களையும் கலங்க வைக்கும் காட்சி அது.


எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்படும் தன் மீது, தன் தந்தை, கணவனுக்கு பிறகு, மகன்களும் கல் எறியும் போது, "நீங்களுமா?", என்று அடிபட்ட பறவை போல் சொராயா பரிதாபமாய் பார்க்கும் காட்சி...ப்ச்.... நெஞ்சு அடைத்துக் கொள்கிறது.


மதத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தின் அராஜகமான கட்டுப்பாடுகளை இந்த படம் வலியுடன், அழுத்தமாக பதிவு செய்கிறது. மனித சமுதாயம் இன்னும் முழுமையாக நாகரீக வளர்ச்சி அடையாமல் காடுமிராண்டிகளாக தான் இருக்கிறார்கள் என்று முகத்தில் அறைந்தார் போல் சொல்கிறது இந்த படம். 


இரானின் அமைதியான, அழகான கிராமத்தின் ஒவ்வொரு காட்சியும் கண் கொள்ளா அழகு.  நிகழ்வுகளின் பாரத்தை நம்முள் இறக்கி வைக்கும் அற்புதமான இசை.


இதயம் கணக்க பார்க்கும் நமக்கு சின்ன ஆறுதலாக கடைசி காட்சி.  படம் முழுதும் பார்க்கும் நமக்கு வலி தான் என்றாலும், அதை காட்சிப் படுத்திய விதத்திற்கும்,அது நம்முள் ஏற்படுத்தும் பாதிப்பிற்கும், கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் இது.  இதை பார்த்தவுடன் பெண்கள் மீது நமக்கு அன்பும், கருணையும், மதிப்பும் இன்னும் கூடும். 


நிச்சயம் பாருங்கள் Stoning of Soraya M ! 

No comments:

Post a Comment